×

குட்டையில் மூழ்கி தாய், மகள் பலி தண்டராம்பட்டு அருகே பரபரப்பு மகளை காப்பாற்ற முயன்றபோது சோகம்

தண்டராம்பட்டு, மார்ச் 24: தண்டராம்பட்டு அருகே மகளை காப்பாற்ற முயன்றபோது, தாயும் குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த சாத்தனூர் ஊராட்சி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி வடிவேல்(40). இவரது மனைவி சென்னம்மாள்(33). இவர்களுக்கு 2 மகள்கள். இதில் மூத்த மகள் மோனிஷா(12) அங்குள்ள அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார்.இந்நிலையில், நேற்று சென்னம்மாள் தனது மகள் மோனிஷாவை அழைத்து கொண்டு, அருகில் உள்ள குட்டையில் துணி துவைக்க சென்றார். அங்கு துணி துவைத்து கொண்டிருந்தபோது, அருகில் இருந்த மோனிஷா குட்டையில் இறங்கி குளித்தார்.

அப்போது, ஆழமான பகுதிக்கு சென்றுவிட்ட மோனிஷா திடீரென நீரில் மூழ்கினார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சென்னம்மாள் மகளை காப்பாற்ற முயற்சி செய்தார். ஆனால், இருவரும் அடுத்தடுத்து குட்டையில் மூழ்கி தத்தளித்தனர்.
அப்போது, அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தாய், மகள் இருவரும் குட்டையில் மூழ்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக குட்டையில் இறங்கி சென்னம்மாள், மோனிஷா ஆகிய இருவரையும் மீட்டு, சாத்தனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், இருவரும் ஆபத்தான நிலையில் இருப்பதை அறிந்து திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர். தொடர்ந்து, திருவண்ணாமலை அரசு மருத்துவனையில் டாக்டர்கள் பரிசோதித்தபோது சென்னம்மாள், மோனிஷா ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது.தகவலறிந்த சாத்தனூர் அணை போலீசார், 2 சடலங்களையும் அதே மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த ஓராண்டுக்கு முன்பு சென்னம்மாளின் மகன் செப்டிக் டேங்க்கில் விழுந்து பலியான நிலையில், தற்போது தாயும், மகளும் குட்டையில் மூழ்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Tandarampatti ,
× RELATED கடந்த 4 நாட்களாக மின் விநியோகம்...