நத்தம், மார்ச் 20: நத்தத்தில் திமுக கூட்டணி கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. நகர செயலாளர் முத்துக்குமாரசாமி தலைமை வகிக்க, தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன், தொகுதி தேர்தல் பொறுப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் பேசினர். தொடர்ந்து நத்தம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆண்டிஅம்பலம் பேசியதாவது, ‘நத்தம் தொகுதிக்கு தேவையானவற்றை பலதடவை சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தும் ஆளும் அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. இந்த தேர்தலில் தமிழகத்தின் முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் அமோக வெற்றி பெற்று பதவியேற்பார்.
அப்போது நமது தொகுதியிலிருந்து என்னை தேர்ந்தெடுத்து அனுப்பினால் நத்தம் பகுதியில் அரசு கலைக்கல்லூரி, ஜவுளி பூங்கா, நிலத்தடி நீர்மட்டம் உயர்த்துவதற்கு ஆங்காங்கே தடுப்பணைகள் போன்ற மக்கள் நலன்காக்கும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவேன். எனவே அனைவரும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கேட்டு கொள்கிறேன். திமுக கூட்டணி கட்சியினர் ஒவ்வொருவரும் வீடு வீடாக சென்று களப்பணி செய்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரிக்க வேண்டும். இந்த தேர்தலில் நமது தலைவர் ஸ்டாலின் வடமதுரையில் தேர்தல் பரப்புரை நிகழ்த்திய போது நத்தம் தொகுதிக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்து முதன்முதலில் பேசினார்.
எனவே அவரது எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் நத்தம் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்’ என்றார். முன்னதாக கூட்டணி கட்சிகளான மமக நகர செயலாளர் அப்துல் அகது, விசிக தொகுதி செயலாளர் தவச்செல்வன், காங்கிரஸ் நகர தலைவர் முகமது அலி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெள்ளைச்சாமி, ஐஎன்டியுசி போக்குவரத்து தொழிற்சங்க மாவட்ட தலைவர் கருப்பையா என பலரும் பேசினர்.