அதிராம்பட்டினம், மார்ச் 19: அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி வளாகத்தில் உள்ள சம்சுதீன் நினைவு அரங்கில் மீலாது நபி விழா நடைபெற்றது. எம்.கே.என் மதரசா-வக்ப் அறக்கட்டளையின் செயலர் முஹம்மது மீராசாகிப் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் தமிழக ஜமாத்துல் உலமா சபையின் மாநில தலைவர் காஜா முஹையதீன் கலந்து கொண்டு நபிகளாரின் சிறப்புகள், ஒழுக்க மாண்புகள் குறித்து உரையாற்றினார். கல்லூரி அரபித் துறையால் நடத்தப்பட்ட மார்க்க அடிப்படையான கட்டுரை, பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. எம்.கே.என் அறக்கட்டளையின் உறுப்பினர்கள், முன்னாள் செயலர் சர்புதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்த்துறை பேராசிரியர் செய்யது அஹமது கபீர் அனைவரையும் வரவேற்றார். முதல்வர் முனைவர் முகம்மது முகைதீன், துணை முதல்வர் முனைவர் முகம்மது நாசர், பேராசிரியர் முஹம்மது இதிரீஸ் உள்ளிட்ட பேராசிரியர்கள் ஆய்வக, அலுவலகப் பணியாளர்கள், மாணவ மாணவிகள், மார்க்க அறிஞர்கள், மஹல்லாவாசிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.