×

டிடிவி தினகரன் வெற்றி பெற்றதும் கோவில்பட்டியில் மக்களை சந்திக்க அலுவலகம் மாணிக்கராஜா பேட்டி

கோவில்பட்டி, மார்ச் 19:  கோவில்பட்டி தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிடும் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அக்கட்சியின் தென் மண்டல அமைப்புச் செயலாளரும் தேர்தல் பிரிவு செயலாளருமான மாணிக்கராஜா கோவில்பட்டி பகுதியில் முக்கியப் பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டினார்.  கோவில்பட்டியில் நாடார் உறவின்முறை சங்கத்தினர் தீப்பெட்டி ஆலை உற்பத்தியாளர் சங்கத்தினர், இல்லத்தார் பிள்ளைமார் சமூக சங்கம், சைவ வேளாளர் சங்கம், வணிகர் சங்கம், யோகீஸ்வரர் சங்கம், முடிதிருத்துவோர் சங்கம், பசும்பொன் அறக்கட்டளை நிறுவனர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பலரைச் சந்தித்து தினகரனுக்கு வாக்கு சேகரித்தார். பின்னர் கோவில்பட்டி பகுதியில் உள்ள ஆர்சி, சிஎஸ்ஐ சர்ச்சுகளுக்கு சென்று பிரார்த்தனை மேற்கொண்டார்.

 பின்னர் மாணிக்கராஜா கூறுகையில், ‘‘டிடிவி தினகரன் வெற்றி பெற்றதும் கோவில்பட்டியில் 24 மணி நேரமும் மக்களை சந்திக்க அலுவலகம் அமைக்கப்படும். தினகரன் வெற்றி பெறுவதால் கோவில்பட்டி தொகுதி முதல்வர் அந்தஸ்தை பெறுவதோடு மக்கள் அனைவருக்கும் விடிவு காலம் பிறக்கும். இதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் கோவில்பட்டி தொகுதி முன்மாதிரி தொகுதியாக விளங்கும். வியாபாரிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். மக்களுக்காக பாடுபடக்கூடியவர் டிடிவி தினகரன். அவருடன் நானும் பணியாற்ற உள்ளேன். மக்களின் குறைகள் கேட்டு உடனுக்குடன் நிவர்த்தி செய்யப்படும்’ என்றார். நிகழ்ச்சிகளில் வடக்கு மாவட்டச் செயலாளர் சிவபெருமாள், கோவில்பட்டி மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜெய்சங்கர், ஒன்றியச் செயலாளர் மகேந்திரன், நகரச் செயலாளர் கார்த்திக், கயத்தார் மேற்கு ஒன்றியச் செயலாளர் கணபதிபாண்டியன், எம்ஜிஆர் மன்ற மாநில துணைச்செயலாளர் பூலோகபாண்டியன் பங்கேற்றனர்.

Tags : Kovilpatti ,DTV Dhinakaran ,
× RELATED கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல திருவிழாவில் நற்கருணை பவனி