×

ரயிலில் சென்ற தமிழக விவசாயிகளை இறக்கிவிட்ட மகாராஷ்டிர அரசை தமிழக அரசு கண்டிக்க பாமக வலியுறுத்தல்

சென்னை: பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: காவிரி நீர் பிரச்னை, மேகதாது அணை விவகாரம் ஆகியவற்றில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதி, ஒன்றிய நீர்வள அமைச்சகத்தின் ஒரு சார்பான நிலைப்பாடு ஆகியவற்றைக் கண்டித்து டெல்லியில் நாளை மறுநாள் ஒன்றிய நீர்வள அமைச்சகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதற்காக தொடர்வண்டி மூலம் சென்ற காவிரி பாசன மாவட்ட விவசாயிகள் சங்கங்களை சேர்ந்தவர்களை மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் அம்மாநில காவல்துறையினர் தடுத்தி நிறுத்தி இறக்கி விட்டதுடன், அவர்களை வலுக்கட்டாயமாக தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.

தமிழக உழவர்கள் மீதான இந்த அடக்குமுறை அநீதியானது; கண்டிக்கத்தக்கது; மேகதாது விவகாரத்தில் தமிழகத்திற்கு இழைக்கப்படும் அநீதியைக் கண்டித்து போராட்டம் நடத்தும் அனைத்து உரிமைகளும் தமிழக விவசாயிகளுக்கு உண்டு. அவர்களின் போராட்டத்தைத் தடுப்பதற்காக அவர்களை மகாராஷ்டிர காவல்துறை தடுத்து நிறுத்தி இறக்கி விட்டது மனித உரிமை மீறல் ஆகும்.

அதுமட்டுமின்றி, இது தமிழ்நாட்டின் உரிமைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். இதை தமிழ்நாடு அரசு வேடிக்கைப் பார்க்கக் கூடாது. டெல்லிக்கு தொடர்வண்டியில் பயணம் செய்த விவசாயிகளை எதற்காக தடுத்து நிறுத்தினார்கள் என்று மகாராஷ்டிர அரசிடமும், காவல்துறையிடமும் தமிழக அரசு விளக்கம் கேட்க வேண்டும். அத்துமீறிய இந்த செயலுக்காக மகாராஷ்டிர அரசை கடுமையாக கண்டிக்க வேண்டும்.

Tags : PMK ,Tamil Nadu government ,Maharashtra government ,Tamil Nadu ,Chennai ,Anbumani ,Union Water Resources Ministry ,Delhi ,Cauvery ,Mekedatu dam ,Union Water Resources Ministry… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து