×

கரூர் அரசு பணி ஆணை ரத்து விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்

புதுடெல்லி: கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட அரசு பணி ஆணை ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் கடந்தாண்டு செப்டம்பர் 27ம் தேதி, தவெக சார்பில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் நடிகர் விஜய்யும், தற்போதைய முதல்வருமான விஜய் பேசும்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 110க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், கடந்த 10ம் தேதி கரூர் சென்ற முதல்வர் விஜய், தவெக கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு வேலைக்கான பணி நியமன ஆணையை வழங்கினார்.

இந்த நடவடிக்கைக்கு எதிராக நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தீரன் திருமுருகன், மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சீனி அகமது உட்பட 3 பேர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். அதில், “கரூர் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதை, உச்ச நீதிமன்றம் நியமித்த குழு கண்காணித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவது விசாரணையை பாதிக்க செய்யும். இது கரூர் சம்பவத்தின் சாட்சிகளை கலைக்கும் நடவடிக்கையாகும். போட்டி தேர்வு, தகுதி அடிப்படையில்தான் அரசு பணி வழங்கப்பட வேண்டும். அதைத்தவிர்த்து ஒரு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கினால், இதுபோன்ற சம்பவங்களில் உயிரிழப்பவர்களும் அரசு வேலை கேட்கும் நிலை ஏற்படும். எனவே அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும்’ என்று தெரிவித்திருந்தனர்.

இந்த மனுவை பரிசீலனை செய்த உயர்நீதிமன்றம், ‘உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தற்காலிக பணியே வழங்க வேண்டும். இருப்பினும் இந்த பணியானது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது’ என்று கடந்த 10ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கடந்த திங்கட்கிழமை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வு, கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கி பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மனுதாரர் தீரன் திருமுருகன், உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், “கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கிய விவகாரத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய உத்தரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் போது, எங்களது தரப்பின் வாதங்களை கேட்காமல் எந்தவித உத்தரவும் பிறப்பிக்க கூடாது என்று தெரிவித்துள்ளார்.

Tags : Karur Government ,Supreme Court ,NEW DELHI ,KARUR ,Velusamipuram, Karur district ,Taweka ,
× RELATED காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு...