×

முத்துலட்சுமி ரெட்டியின் மனிதநேயப் பணிகள் தலைமுறைகளை கடந்து என்றும் நிலைத்திருக்கும்: முதல்வர் விஜய் பதிவு

 

சென்னை: டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி பிறந்தநாளையொட்டி முதல்வர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில்; தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்துவரும், மெட்ராஸ் மாகாண சட்டமன்ற மேலவைக்கு 1927ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்மணி என்ற பெருமைக்குரியவரும், பெண்களின் கல்வி, உரிமை மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகவும், ஏழை எளிய மக்களின் நலனுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்தவருமான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்களின் பிறந்த நாளில் அவரது மகத்தான சேவைகளை நினைவுகூர்ந்து போற்றுகிறேன்!

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி அவர்கள், ஆதரவற்ற பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் புகலிடமாக ‘அவ்வை இல்லம்’, புற்றுநோயாளிகளின் வாழ்வொளியாக ‘அடையாறு புற்றுநோய் நிலையம்’ போன்ற மகத்தான நிறுவனங்களை உருவாக்கியதோடு, குழந்தைத் திருமண தடைச்சட்டத்துக்கு வித்திட்ட சமூகப் போராளி ஆவார். அவரது உயரிய இலட்சியங்களும், பெண் முன்னேற்ற முன்னெடுப்புகளும், மனிதநேயப் பணிகளும், தன்னலமற்ற அர்ப்பணிப்பும் தலைமுறைகளைக் கடந்து என்றும் தமிழ் மண்ணில் நிலைத்திருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Muthulakshmi Reddy ,Chief Minister ,Vijay ,Chennai ,Dr. ,Tamil Nadu ,Madras Provincial Legislative Assembly ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து