ஓசூர், ஜூலை 28: ஓசூர் மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், உரிமை வழங்கல் முகாம் நேற்று துவங்கியது. ஓசூர் மாநகராட்சி வணிக வளாக அரங்கில், தூய்மை பணியாளர்கள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், சிறப்பு முகாம் நடந்தது. முகாமை மாநகராட்சி மேயர் சத்யா குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார். காலை முதல் மாலை 4 மணி வரை நடைபெற்ற முகாமில், 13 அரசுத்துறைகளின் சார்பில் தனித்தனி கவுன்டர்கள் அமைக்கப்பட்டிருந்தன.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய்த் துறை, ஆதார் மற்றும் மின்னணு சேவைகள், தாட்கோ மற்றும் இ-சேவை மையங்கள், தமிழ்நாடு தூய்மை பணியாளர்கள் நலவாரியம், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, மாவட்ட தொழில் மையம் மற்றும் முன்னோடி வங்கி சேவைகள், தொழிலாளர் நலத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறைகளின் சேவைகள் இந்த முகாமில் வழங்கப்பட்டன.
இதில், சுமார் 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் நேரடியாக பயன்பெறுவார்கள் என மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கமிஷனர் சபீர் ஆலம், துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழுத் தலைவர் மாதேஸ்வரன், மாமன்ற உறுப்பினர்கள், மாநகர அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
