×

நத்தம் தொகுதியில் மலைகிராமங்களில் தடுப்பணைகட்டி நீர் ஆதாரங்கள் பாதுகாக்கப்படும் திமுக வேட்பாளர் ஆண்டிஅம்பலம் உறுதி

நத்தம், மார்ச் 16: திமுக ஆட்சி அமைந்தவுடன் மலைக்கிராமங்களில் தடுப்பணைகளை கட்டி நீர் ஆதாரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, நத்தம் திமுக வேட்பாளர் ஆண்டிஅம்பலம் எம்எல்ஏ உறுதியளித்தார்.
நத்தம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆண்டிஅம்பலம் நேற்று காலையில் நத்தம் தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் திருமலையிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் தலைமை செயற்குழு உறுப்பினர் விஜயன், நகர செயலாளர் முத்துக்குமாரசாமி ஆகியோர் உடன் இருந்தனர். தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், திமுக ஆட்சி அமைந்தவுடன் மலைக்கிராமங்களில் தடுப்பணைகளை கட்டி நீர் ஆதாரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் என்னால் முடிந்த வரைக்கும் நத்தம் தொகுதியில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கி கடந்த காலங்களில் குறிப்பிடும்படியான பணிகளை செய்துள்ளேன். மேலும் வரும் தேர்தலிலும் என்னை கூடுதலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும். இதன் மூலம் தலைவர் ஸ்டாலின் அவர்களின் தலைமையில் அமையும் அரசில் பங்கெடுத்து நல்ல பல திட்டங்களை பெறச்செய்வேன் என்றார்.

Tags : DMK ,Andiambalam ,Natham ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு