×

கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை உங்களுடன் இருப்பேன்

புதுக்கோட்டை, மார்ச் 15: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் தற்போது சுகாதாரத்துறை அமைச்சராக உள்ள விஜயபாஸ்கர் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று விராலிமலை மேற்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட கல்குடியில் துவங்கி தாளப்பட்டி, விட்டமாபட்டி, சாரணக்குடி, பொருவாய், கல்லுப்பட்டி, பூதகுடி, இராசநாயக்கன்பட்டி, இ.மேட்டுப்பட்டி, கல்குளத்துப்பட்டி, அம்பாள் நகர், சமத்துவபுரம், குறிச்சிப்பட்டி, கொண்டமநாயக்கன்பட்டி, தேத்தாம்பட்டி, வடுகப்பட்டி, மேப்பூதகுடி, மே.குளவாய்ப்பட்டி, சித்தகுடிப்பட்டி, மணமேட்டுப்பட்டி, விராலிமலை உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்குகளை சேகரித்தார்.

பிரசாரத்தின்போது விஜயபாஸ்கர் பேசியதாவது: என்னை கைத்தூக்கி விடக்கூடியவர்கள் நீங்கள் தான். இது மட்டுமல்லாமல் எந்த பகுதியாக இருந்தாலும் விஜயபாஸ்கர் உங்கள் வீட்டுப்பிள்ளை தான். நான் எப்போதும் உங்களுக்கானவன். மக்களின் அடிப்படை தேவைகளை போக்க தேர்தல் காலங்களில் மட்டுமல்ல, எப்போதும் வருவேன். நான் உங்கள் வீட்டுப்பிள்ளையாக எப்போதும் உங்களுடனே இருப்பேன்.

எனவே எனது கடைசி சொட்டு ரத்தம் உள்ளவரை நன்றியோடு இருப்பேன். இந்த பிள்ளையை எப்போதும் நீங்கள் கைவிடக்கூடாது. இரட்டை இலை சின்னத்திலேயே வாக்களிக்க வேண்டும் என்றார். விட்டமாபட்டியில் தேர்தல் பிரசாரத்தை முடித்து விட்டு செல்லும்போது அப்பகுதியில் உள்ள வயலில் பெண்கள் நாற்று நட்டு கொண்டிருந்தனர். அவர்களை பார்த்தவுடன் காரை நிறுத்திய அமைச்சர் விஜயபாஸ்கர், வயலில் இறங்கி அந்த பெண்களோடு சேர்ந்து சிறிதுநேரம் நாற்று நட்டார். இதில் மகிழ்ச்சியடைந்த பெண்கள், அவர்களின் ஆதரவை தெரிவித்தனர்.

Tags :
× RELATED வாக்கு எண்ணும் மையத்தில் ட்ரோன் பறக்க தடை: மாவட்ட எஸ்பி தகவல்