தூத்துக்குடி, மார்ச் 15: விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் ஜி.வி. மார்கண்டேயனை ஆதரித்து மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி எம்பி இன்று பிரசாரம் மேற்கொள்கிறார். இதுகுறித்து வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிடும் ஜி.வி. மார்க்கண்டேயனை ஆதரித்து மகளிர் அணி மாநில செயலாளர் கனிமொழி இன்று (15ம்தேதி) கிராமம் தோன்று தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார்.
இன்று மாலை 4 மணிக்கு புதூர் ஒன்றியம், சென்னமரெட்டிபட்டி கிராமத்தில் பிரசாரத்தை துவக்கும் அவர், தொடர்ந்து முத்துசாமிபுரம் ஊராட்சி, மணியகாரன்பட்டி ஊராட்சி, சிவலார்பட்டி ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் வாக்குசேகரித்துப் பேசுகிறார். புதூர் பேரூராட்சி பகுதியில் தேர்தல் பிரசாரத்தை நிறைவுசெய்கிறார். எனவே, நிகழ்ச்சிகளில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், சார்பு அணியினர், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுகிறேன்.