×

மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உள்பட 19 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: தலைமை செயலாளர் உத்தரவு

 

சென்னை: மின்வாரிய தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 19 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாக இடமாற்றம் செய்து தலைமை செயலாளர் சாய்குமார் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவு: தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக இருந்த ராதாகிருஷ்ணன், அண்ணா நிர்வாகப் பணியாளர் கல்லூரியின் இயக்குநராகவும், கூடுதலாக பயிற்சித் துறை தலைமை இயக்குநராகவும், உயர்கல்வித் துறை செயலாளராக இருந்த அருண்ராய், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராகவும், தமிழ்நாடு மின்சார வாரியம், கூடுதலாக தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் ஆகியவற்றின் தலைவராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளராக இருந்த பிரதாப் யாதவ், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளராகவும், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளராக இருந்த காகர்லா உஷா, சுற்றுச்சூழல், காலநிலை மற்றும் வனத்துறை செயலாளராகவும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை செயலாளராக இருந்த அதுல் ஆனந்த், தகவல் தொழில் நுட்பத் துறை செயலாளராகவும், தொழில்துறை ஆணையராக இருந்த நிர்மல் ராஜ், போக்குவரத்துத் துறை செயலாளராகவும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குராக இருந்த உமாநாத், தொழில்துறை ஆணையராகவும், தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன ஆணையராக இருந்த தீராஜ் குமார், உயர்கல்வித் துறை செயலாளராகவும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவன ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சிறப்பு செயலாளராக இருந்த சுந்தரவள்ளி, அதே துறையில் செயலாளராகவும், வருவாய்துறை ஆணையராக இருந்த சிஜி தாமஸ் வைத்யன், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராகவும், போக்குவரத்துத் துறை செயலாளராக இருந்த வள்ளலார், தொழிலாளர் நலத்துறை ஆணையராகவும், நில நிர்வாக ஆணையராக இருந்த கஜலட்சுமி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையராகவும், சமூக நலத்துறை இயக்குநராக இருந்த மகேஸ்வரி ரவிகுமார், கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். வீட்டுவசதி மற்றும் நகர்புற மேம்பாடு கூடுதல் செயலாளராக இருந்த ரத்னா, சென்னை, இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையராகவும், போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு இயக்குநராக இருந்த பாஸ்கர பாண்டியன்,

அருங்காட்சியகங்கள் துறை இயக்குநராகவும், கலை மற்றும் பண்பாட்டுத் துறை இயக்குநராக இருந்த பிருந்தா தேவி, சமூக நலத்துறை இயக்குநராகவும், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை ஆணையராக இருந்த பூஜா குல்கர்னி தமிழ்நாடு உள்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், கோயம்புத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியராக இருந்த வாகே சங்கேத் பல்வந்த், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் செயல் இயக்குநராகவும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Electricity Board ,Radhakrishnan ,Chennai ,Chief Secretary ,Saikumar ,Tamil Nadu Electricity Board ,Tamil Nadu Power Generation and Distribution Corporation… ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து