×

அரியலூரில் மதுக்கடையை அகற்றக் கோரிய பள்ளி மாணவிகள் மீது தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்

சென்னை: அரியலூர் மாவட்டம் கோடாலியில், டாஸ்மாக் கடையை மூடக்கோரி அறவழியில் போராடிய பள்ளி மாணவிகள் மீது காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தடியடி நடத்தியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் கோடாலியில், டாஸ்மாக் கடையை மூடக்கோரி அறவழியில் போராடிய பள்ளி மாணவிகள் மீது முதல்வர் ஜோசப் விஜய் அரசின் காவல்துறை காட்டுமிராண்டித்தனமான தடியடி நடத்தியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தக் கொடூரத் தாக்குதலில் காயமடைந்த நான்கு பள்ளி மாணவிகள் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நியாயமான கோரிக்கைக்காகப் போராடிய பெண் குழந்தைகளை தாக்கியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

ஆட்சியைக் கைப்பற்றியவுடன் பெண்களுக்குப் பாதுகாப்பு தருவோம் எனத் தேர்தல் களத்தில் முழங்கிய முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய், தற்போதைய அராஜகச் சம்பவத்திற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? தவெக ஆட்சியில் பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு என்பது வெறும் காகித விளம்பரமே என்பதை கோடாலி கிராமத்தில் நடந்த இந்தக் கொடூரத் தடியடிச் சம்பவம் உலகிற்குத் தோலுரித்துக் காட்டியுள்ளது.

மதுவின் பிடியில் இருந்து தங்களைக் காக்கப் போராடிய பிஞ்சுக் குழந்தைகள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறை அதிகாரிகள் மீது தவெக அரசு உடனடியாகக் கடுமையான சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட மாணவிகளுக்கு உரிய உயர்தரச் சிகிச்சை வழங்குவதோடு, இதுபோல பள்ளிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் அருகில் இருக்கும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Tags : Nayinar Nagendran ,Ariyalur Chennai ,BJP ,Tasmak ,Kotali, Ariyalur district ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து