தாம்பரம், ஜூலை 6: திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் நிதீஷ் (23), இவர் சேலையூரில் தங்கி அங்குள்ள தனியார் கல்லூரியில் வேளாண்மை 4ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று அதிகாலை அவரது நண்பர் சேவாக் (24) என்பவர் புல்லட் வாகனம் ஓட்ட நிதீஷ் பின்னால் அமர்ந்தபடி சேலையூர் – அகரம் தென் பிரதான சாலையில் சென்றுள்ளனர். அப்போது தனியார் கல்லூரி அருகே யு டர்ன் செய்தபோது எதிர் திசையில் சேலையூர், எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (31) என்பவர் அதிவேகமாக ஓட்டி வந்த இருசக்கர வாகனம் புல்லட் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் புல்லட் வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நிதிஷுக்கு தலை மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. சேவாக்குக்கு நெற்றி, தலை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. மற்றொரு வாகனத்தில் வந்த மணிகண்டனுக்கும் விபத்தில் காயங்கள் ஏற்பட்டது.விபத்தில் காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இதில் தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிதிஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷேவாக் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். படுகாயம் அடைந்த மணிகண்டன் தாம்பரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து நிதீஷ் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
