×

கண்ணகி நகர் பகுதியில் 53 கிலோ குட்கா பறிமுதல்

 

துரைப்பாக்கம், ஜூலை 8: கண்ணகி நகர் பகுதியில் உள்ள கடையில் விற்பனைக்காக வைத்திருந்த 53 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக, 3 பேர் கைது செய்யப்பட்டனர். துரைப்பாக்கம் கண்ணகி நகர் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கண்ணகிநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அதில் குடியிருப்பில் உள்ள சிறிய கடையில் புகையிலை பொருட்கள் விற்பதை உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து கடையில் சோதனை நடத்தியதில் 36 கிலோ ஹான்ஸ், 6 கிலோ கூல்லிப், 11 கிலோ பாக்குகளும் என மொத்தம் 53 கிலோ புகையிலை பொருட்கள் இருப்பது தெரிந்தது.

அவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணையில், கண்ணகி நகரை சேர்ந்த பாண்டியன் (59), ஆஷா (40), சந்திர சோனியா (59) ஆகியோர், ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவில் இருந்து ரயில் மூலம் புகையிலை பொருட்களை வாங்கி வந்து கண்ணகி நகர் பகுதியில் விற்பனை செய்ததும், அதேபோல் வடசென்னை பகுதியில் இருந்தும் புகையிலை பொருட்களை வாங்கி வந்து பெரும்பாக்கம், தாழம்பூர், சிறுசேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறு வியாபாரிகளிடம் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார், 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Tags : Kannagi Nagar ,Duraipakkam ,
× RELATED திருப்போரூரில் மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டிகள்