×

ஈரான் தாக்குதலில் தப்பித்து 20 லட்சம் பேரல் கச்சா எண்ணெயுடன் பத்திரமாக இந்தியா வந்த கப்பல்.!!

புவனேஸ்வர்: ஹோர்முஸ் நீரிணையில் துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானதாக கூறப்பட்ட ‘எம்டி சன்மார் ஹெரால்ட்’ (MT Sanmar Herald) என்ற கச்சா எண்ணெய் கப்பல், ஒடிசாவின் பாராதீப் துறைமுகத்தை பத்திரமாக வந்தடைந்தது. தாக்குதலில் கப்பலின் முன்பகுதி சேதமடைந்த போதிலும், சுமார் 20 லட்சம் பேரல் ஈராக் கச்சா எண்ணெயுடன் இந்த கப்பல் பத்திரமாக தற்போது இந்தியா வந்து சேர்ந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர். மேற்கு ஆசியாவில் அதிகரித்து காணப்பட்ட போர் சூழலுக்கு மத்தியில், ஈராக்கிலிருந்து பஸ்ரா மீடியம் மற்றும் பஸ்ரா ஹெவி கச்சா எண்ணெயை ஏற்றி வந்து கொண்டிருந்த எம்டி சன்மார் ஹெரால்ட் கப்பல், சில வாரங்களுக்கு முன் ஈரானிய கடல் பகுதிக்கு அருகே வந்து கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டை எதிர்கொண்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலை ஈரான் ராணுவப் பிரிவினர் நடத்தியதாகவும், இதன் போது கப்பலின் கண்ணாடிகள் உடைந்ததாகவும் தெரிகிறது. சிறிய சேதங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து, குறிப்பிட்ட இந்த தாக்குதலுக்குப் பிறகு கடற்பயணம் தடைபட்டதால், கப்பல் மாற்று வழியில் பயணித்தது. பின்னர் இந்திய கடற்படையின் தொடர் கண்காணிப்பு மற்றும் உதவியுடன் பாதுகாப்பாக இந்த கப்பலின் பயணம் தொடர்ந்தது

இந்த நிலையில் ஒடிசா கரையை வெற்றிகரமாக இந்த கப்பல் வந்தடைந்ததும், பாராதீப் துறைமுகத்தின் மிதவை இறங்குதளம் (SPM-I) மூலம் கச்சா எண்ணெய் இறக்கும் பணி தொடங்கியது. ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே பயணித்தபோது தாக்குதல் காரணமாக சேதம் ஏற்பட்ட போதிலும், இந்தியக் கடற்படையுடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்ட அந்த டேங்கர் கப்பல், தனது பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்ததாக பாரதீப் துறைமுக நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags : Iran ,India ,Bhubaneswar ,MT Sanmar Herald ,Strait of Hormuz ,Paradip, Odisha ,
× RELATED ராமர் கோயில் நன்கொடை முறைகேடு...