×

முட்டை வீசி என் மீது தாக்குதல் நடத்திய பாஜவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: திரிணாமுல் காங். எம்.பி மஹுவா மொய்த்ரா ஆவேசம்

கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தலில் பாஜ அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 60க்கும் மேற்பட்டோர் கட்சி தலைவர் மம்தா பானர்ஜிக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அவர்கள் சட்டமன்றத்தில் தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். அதேபோல் மக்களவையில் உள்ள 28 திரிணாமுல் எம்.பி.க்களில் 20 பேர், இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியில் (எஸ்சிபிஐ) இணைந்து பாஜவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாங்கள்தான் உண்மையான திரிணாமுல் காங்கிரஸ் என மம்தா அணியினர் போராடி வருகின்றனர். இது தொடர்பாக மக்களவை செயலரிடமும், தேர்தல் ஆணையத்திடமும் அவர்கள் புகார் கடிதங்களை கொடுத்துள்ளனர். இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யான மஹுவா மொய்த்ரா, தனது தொகுதியில் உள்ள அலுவலகத்துக்கு வெளியே நேற்று முன்தினம் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், மொய்த்ரா மீது முட்டை, கற்களை வீசி தாக்கினர்.

இதுதொடர்பாக மேற்கு வங்க போலீஸ் டிஜிபி சித்நாத் குப்தாவிடம் மஹுவா மொய்த்ரா புகார் கொடுத்துள்ளார். அதில், ‘எனது தொகுதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்தின் மீது சிலர் முட்டை, கற்களை வீசி தாக்கினர். இதில் நான் காயமடைந்தேன். இதை, அங்கிருந்த போலீசார் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர். தாக்குதலில் ஈடுபட்டது பாஜ தொண்டர்கள்தான். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Bajavinar ,Trinamool ,Kang ,M. P Mahua Moitra ,KOLKATA ,BAJA AMOGA ,WEST BENGA ,Trinamool Congress ,Mamta Banerjee ,
× RELATED இந்தியா-பாகிஸ்தான் உறவுகளை...