களியக்காவிளை, மார்ச் 11 : குமரி மாவட்டம் களியக்காவிளை செக்போஸ்ட் பகுதியில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் நேற்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் இருந்து களியக்காவிளை நோக்கி ஒரு கார் வந்தது. அதிகாரிகள் காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சிறு சிறு பெட்டிகளில் தங்க ஆபரணங்கள் இருந்தன. வாகனத்தை முழுமையாக சோதனை செய்தபோது, மொத்தம் 8.3 கிலோ தங்கம் இருந்தது.
விசாரணையில், குமரி மாவட்டத்தில் உள்ள நகை கடைகளில் விற்பனை செய்வதற்காக ஆர்டரின்பேரில் திருவனந்தபுரத்தில் இருந்து கொண்டு வருவதாகவும், அதற்கான பில் மற்றும் ஆவணங்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர். ஆவணங்களின் உண்மை தன்மையை அறிவதற்காக அதிகாரிகள் தங்கத்தை வாகனத்துடன் பறிமுதல் செய்து காட்டாத்துறையில் உள்ள வணிக வரித்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு நகைகளுக்கு ஜிஎஸ்டி வரி கட்டியதற்கான ரசீதுகள் மற்றும் ஆவணங்களை காட்டினர். இதையடுத்து பறக்கும் படையினர் நகைகளை சம்பந்தப்பட்டவர்களிடம் திருப்பி ஒப்படைத்தனர்.