ஊட்டி, மார்ச் 11: ஊட்டியில் உள்ள சேட் மகப்பேறு மருத்துவமனையில் கட்டுமானம் மற்றும் மேம்பாட்டு பணிகள் முடிந்த நிலையில், இரு ஆண்டுகளுக்கு பின் மீண்டும் திறக்கப்பட்டது. ஊட்டியில் உள்ள சேட் தலைமை அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு தினமும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மகப்பேறு மற்றும் சிகிச்சைக்காக கர்ப்பிணி பெண்கள் வந்துச் சென்றனர். இந்நிலையில், இந்த மருத்துவமனை மேம்பாட்டு பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் துவக்கப்பட்டது. இதனால், மகப்பேறு மருத்துவமனை ஊட்டி தலைமை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. சேட் மருத்துவமனையில் எவ்வித சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், மேம்பாட்டு பணிகள் மற்றும் கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், மீண்டும் இந்த மருத்துவமனை கடந்த சில மாதங்களுக்கு முன் செயல்பாட்டிற்கு வந்தது. எனினும், இந்த மருத்துவமனை கொரோனா பரிசோதனை மையம் மற்றும் கொரோனா தடுப்பூசி போடப்படும் மையமாக செயல்பட்டு வந்தது. இந்நிலையில், மீண்டும் இந்த மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை நேற்று முதல் துவக்கப்பட்டது. இனி, இந்த மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சைககள் வழக்கம் போல் மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.