கன்னூர்: கேரளா மாநிலத்தில் சற்று ஓய்ந்திருந்த தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைய தொடங்கி இருக்கிறது. இதனை தொடர்ந்து கன்னூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்ய கூடும் என்பதற்கான ‘ஆரஞ்சு எச்சரிக்கை’ விடுக்கப்பட்டு உள்ளது.
வடக்கு கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையமானது ஜூன் 29-ஆம் தேதியான இன்று கன்னூர் மற்றும் காசர்கோடு ஆகிய 2 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்டும், திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு கனமழை பெரிவதற்கான வாய்ப்பை குறிக்கும் ‘மஞ்சள் எச்சரிக்கை’ விடுத்துள்ளது.
கனமழை அல்லது மிக கனமழையால் வெள்ள நீரால் பாதிப்பு, போக்குவரத்து மற்றும் இயல்பு வாழ்க்கையில் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்பதால், எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் வசிக்கும் மக்கள், அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளைப் தெரிந்து கொண்டு அதற்கேற்ப முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
