தேனி: பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான அளவில் மாம்பழங்கள் அதிகளவு விளைவிக்கப்படுகின்றன. தமிழகத்தில் சேலத்திற்கு அடுத்த படியாக பெரியகுளம் மாம்பழத்திற்கு அதிக மவுசு உண்டு. இங்கு விளைவிக்கப்படும் மா வகைகள் வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. தவிர, பழச்சாறு ஆலைகளுக்கும் அதிகளவு அனுப்பி வைக்கப்படுகின்றன. பெரியகுளத்தில் குளிர்பதன கிட்டங்கி இல்லாததால் சீசன் நேரங்களில் இருப்பு வைக்க முடியாமல் மா விவசாயிகள் தங்களது மா வகைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டியதாகிறது.
இதனால் மா விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைப்பதில்லை. அதுபோல் வெளிமாநிலங்களில் உள்ள பழச்சாறு நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும் போதும் விவசாயிகளுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை. எனவே பெரியகுளத்தில் குளிர்பதன கிட்டங்கி மற்றும் பழச்சாறு ஆலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
