×

வாழ்க்கை போராட்டம் அல்ல, விளையாட்டு என்பதை சத்குருவின் கிருஷ்ண லீலா புத்தகம் உணர்த்துகிறது: மதுரை நூல் அறிமுக விழாவில் இராம ஸ்ரீநிவாசன் பேச்சு

மதுரை: ‘வாழ்க்கை ஒரு போராட்டம் அல்ல, விளையாட்டு என்பதை சத்குருவின் கிருஷ்ண லீலா புத்தகம் உணர்த்துகிறது’ என மதுரை நூல் அறிமுக விழாவில் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன் பேசினார்.

சத்குருவின் பார்வையில் கிருஷ்ணரின் பன்முகப் பரிமாணங்களை விளக்கும் ‘கிருஷ்ண லீலா’ நூலின் அறிமுக விழா இன்று (14/06/2026) மதுரை, காமராஜர் சாலையில் உள்ள வி. எஸ் செல்லம் சரஸ்வதி மாளிகையில் நடைபெற்றது.

இவ்விழாவில் வேதபிரியாநந்தாஜி மகாராஜ், அழகர்கோவில் அர்ச்சகர் சுந்தர நாராயணன் பட்டர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். இவர்களுடன் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பேராசிரியர் இராம ஸ்ரீநிவாசன், பிரபல எழுத்தாளர் கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா மற்றும் பேராசிரியர் குருஞானாம்பிகா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று இந்நூல் குறித்து சிறப்புரை ஆற்றினர்.

இவ்விழாவில் இராம ஸ்ரீநிவாசன் பேசுகையில், “இந்தப் புத்தகத்திற்கு சத்குரு லீலா என்று பெயரிட்டு இருக்கிறார்கள். ஆனால் நானாக இருந்தால் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று பெயரிட்டு இருப்பேன். கிருஷணனின் வாழ்க்கை அது போன்றதே. அவர் பாரம்பரிய மரபுகளை உடைத்தவர். வாழ்க்கை என்பது போராட்டம் இல்லை, அது ஒரு விளையாட்டு என்பதை இந்தப் புத்தகத்தை படிக்கும் போது நமக்குப் புரியும். நம் கிராமங்களில் இதனை கவனிக்க முடியும், பெரியம்மை போன்ற நோய் தொற்றுகளை கூட ‘அம்மை விளையாடி’ இருக்கிறது என்றும் அதனை கடவுள் போன்றும் பாவிக்கும் ஒரு மனநிலை உண்டு. இந்த மண்ணுக்கே உரிய பண்பாடு இதுவாகும்.” எனப் பேசினார்.

கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2005-ம் ஆண்டு, கிருஷ்ணரின் வாழ்வை மையமாக வைத்து “லீலா” என்ற சிறப்பு நிகழ்ச்சியை சத்குரு வழிநடத்தினார். கிருஷ்ணர் தனது வாழ்வின் பல முக்கிய தருணங்களை எவ்வாறு விளையாட்டுத்தனத்துடன் இலகுவாக கையாண்டார் என்பதை விளக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி சத்குருவால் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

அந்த லீலா நிகழ்ச்சியில் கிருஷ்ணரின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து சத்குரு ஆற்றிய உரைகளை, பிரபல எழுத்தாளர் ‘சுபா’ தமிழில் எழுத்தாக்கம் செய்தார். இது ‘ஈஷா காட்டுப்பூ’ மாத இதழில் 150-க்கும் மேற்பட்ட மாதங்கள் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அந்தத் தொடர் தற்போது புத்தக வடிவம் பெற்றுள்ளது. ஈஷா லைஃப் சார்பில் வெளியிடப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தின் முதல் பாகம் தற்போது திருச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கிருஷ்ணர் குறித்து சத்குரு கூறுகையில், “கிருஷ்ணனை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால், சமநிலை தவறாத மூளை, அதே சமயம் கண்மூடித்தனமாய் உருகும் இதயம் இரண்டும் இருந்தால்தான் சாத்தியம்” எனக் கூறியுள்ளார்.

சத்குருவின் புத்தகங்கள் தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம், ஸ்பானிஷ், ஜெர்மன், பிரெஞ்சு உள்ளிட்ட உலக மொழிகள் என 50-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகங்கள் இதுவரை உலகம் முழுவதும் 50 லட்சத்துக்கும் அதிகமான பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளன. சத்குருவின் படைப்புகளில் ‘இன்னர் இன்ஜினியரிங்’, ‘கர்மா’ ஆகிய நூல்கள் உலகப்புகழ் பெற்ற ‘நியூயார்க் டைம்ஸ் பெஸ்ட் செல்லர்’ பட்டியலில் இடம் பெற்று சர்வதேச அளவில் சாதனை படைத்துள்ளன.

அந்த வரிசையில் ஈஷா லைஃப் சார்பில் தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த ‘கிருஷ்ண லீலா’ புத்தகம் தமிழகத்தின் அனைத்து முன்னணி புத்தகக் கடைகளிலும், பிளிப்கார்ட் மற்றும் ஈஷா லைஃப் போன்ற இணையதளங்களிலும் விற்பனைக்கு வந்துள்ளது.

முன்னதாக புதுச்சேரி மற்றும் திருச்சி நகரங்களில் இந்த நூல் அறிமுக விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, தற்போது மதுரையில் நடைபெற்றுள்ளது. இதனை அடுத்து சென்னையில் சிறந்த தமிழ் அறிஞர்களைக் கொண்டு கிருஷ்ண லீலா நூல் அறிமுக விழாக்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Sadguru ,Rama Srinivasan ,Madurai Nul Debut Ceremony ,Madurai ,Krishna Leela ,Madurai Book Debut Ceremony ,Sadhguru ,
× RELATED தனியார் ரிசார்ட்டில் சாப்பிட்ட...