புதுடெல்லி: அதிக எத்தனால் கலந்த பெட்ரோலுக்கு கலால் வரி விலக்கை நீட்டிப்பு செய்து ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து அந்நிய செலாவணியைச் சேமிக்கவும் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. மேற்காசியாவில் நிலவும் போர் காரணமாக கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கவும், கார்பன் உமிழ்வை கட்டுப்படுத்தவும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் உயிரி எரிபொருட்களுக்கான தேவையை அதிகரிக்கவும் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில், எத்தனால் கலந்த பெட்ரோலின் பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. ஏற்கனவே பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் கலக்கும் இலக்கை நிர்ணயித்த காலத்திற்கு முன்பே எட்டி விட்டது. தொடர்ந்து பெட்ரோலில் 30 சதவீதம் வரை எத்தனால் பயன்படுத்தும் முறைகளை ஆராய்ந்து வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள இ20 எனப்படும் 20 சதவீத எத்தனால் கலப்பு திட்டத்தையும் கடந்து, பெட்ரோலில் அதிகளவு எத்தனால் கலப்பதை ஊக்குவிக்கும் வகையில், 22 சதவீதம், 25 சதவீதம், 27 சதவீதம் மற்றும் 30 சதவீதம் எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலுக்கு மத்திய கலால் வரி விலக்கை ஒன்றிய அரசு நீட்டித்துள்ளது.
இது உற்பத்தியாளர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. பெட்ரோலுக்கு உரிய வரிகள் செலுத்தப்பட்டு, கலப்புக்கு பயன்படுத்தப்படும் எத்தனாலுக்கு பொருந்தக்கூடிய ஜிஎஸ்டி செலுத்தப்பட்டிருந்தால் மட்டுமே இந்த வரி விலக்குகள் பொருந்தும்.
