டெல்லி: தொடர்ச்சியாக 4399 நாட்கள் பிரதமராக பதவி வகித்துள்ளதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர்களில், இந்தியாவில் நீண்ட காலம் அப்பதவியை வகித்தவர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்று சாதனை படைத்து உள்ளார்.
கடந்த 1952-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக நேரு பதவியில் இருந்த நாட்களின் எண்ணிக்கை 4,398 ஆகும். இந்த சாதனை நாட்களின் எண்ணிக்கையை தான் தற்போது பிரதமர் மோடி கடந்துள்ளார். நாடு சுதந்திரம் அடைந்து1947 முதல் 1952 வரை நேரு பிரதமராக பதவி வகித்தாலும், தேர்தல் மூலம் அவர் தேர்வு செய்யப்படவில்லை.
எனவே 1952 தேர்தலுக்கு பிறகு நேரு பிரதமராக பதவி வகித்த தொடர்ச்சியான நாட்கள் தான், நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்கிற வகையில் அதிக நாட்கள் பிரதமராக இருந்ததாக கணக்கில் எடுத்து கொள்ளப்பட்டு உள்ளது. அந்த வகையில் மத்திய அரசின் தலைமைப் பொறுப்பில் தொடர்ச்சியாக 12 ஆண்டுகளை நிறைவு செய்ததன் மூலம் 4398 நாட்கள் என்ற நேருவின் சாதனையை முறியடித்து, இன்றுடன் (ஜூன் 10, 2026) 4399 நாட்கள் தொடர்ச்சியாக பிரதமராக பதவி வகித்து, மக்களால் தேர்வு செய்யப்பட்டு இந்தியாவின் மிக நீண்ட காலம் தொடர்ந்து பதவியில் இருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற சாதனையை மோடி படைத்து உள்ளார்.
காங்கிரஸ் அல்லாத பிற கட்சியைச் சேர்ந்த ஒரு பிரதமர், இந்தியாவில் இவ்வளவு நீண்ட காலம் தொடர்ந்து ஆட்சியில் இருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் இந்தியாவின் நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக சாதனை படைத்தது உள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு, பல உலகத் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.
