×

பதவி ஏற்ற இரண்டு நாளில் கர்நாடக அமைச்சர் ராமலிங்கரெட்டி ராஜினாமா: முதல்வர் டி.கே.சிவகுமார் அதிர்ச்சி

பெங்களூரு: பெங்களூரு மேம்பாட்டு துறை வழங்காமல் புறக்கணிக்கப்பட்டதில் அதிருப்தியடைந்த அமைச்சர் ராமலிங்க ரெட்டி, பதவியேற்ற இரண்டு நாளில் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, கடிதத்தை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு அனுப்பியுள்ளார். இது டி.கே. சிவகுமாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது மட்டுமின்றி காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஆட்சி தலைமை மாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, கடந்த 3ம் தேதி புதிய முதல்வராக டி.கே.சிவகுமாரும், துணைமுதல்வராக டாக்டர் ஜி.பரமேஸ்வர் மற்றும் 12 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர். அவர்களுக்கான துறைகள் நேற்று முன்தினம் ஒதுக்கீடு செய்து முதல்வர் டி.கே.சிவகுமார், ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பினார். அதற்கு ஆளுநர் கெலாட் ஒப்புதல் வழங்கியதை தொடர்ந்து, புதிய அமைச்சர்களுக்கான துறைகள் கர்நாடக மாநில அரசிதழில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் மூத்த அமைச்சரான ராமலிங்கரெட்டிக்கு பெங்களூரு மேம்பாட்டு துறை வழங்குவதாக உறுதியளிக்கப்பட்டிருந்த நிலையில் நீர்ப்பாசன துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் அதிருப்தியடைந்த ராமலிங்கரெட்டி, நேற்று தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து, அதற்கான கடிதத்தை உதவியாளர் மூலம் முதல்வர் அலுவலகத்திற்கு கொடுத்து அனுப்பினார்.

சமாதானம் செய்வேன்: முதல்வர் பேட்டி;
இது குறித்து முதல்வர் டி.கே.சிவகுமார் கூறும்போது, ‘ராமலிங்கரெட்டி கட்சியின் மூத்த தலைவர், எங்களுக்கு வழிகாட்டியாக இருப்பவர். எனக்கு நல்ல நண்பராக உள்ளார். துறை ஒதுக்கீடு தொடர்பாக அவருக்கு ஏற்பட்டுள்ள அதிருப்தியை நீக்க நேரில் சந்தித்து சமாதானம் செய்வேன். ராமலிங்கரெட்டி முடிவால் ஆட்சிக்கோ, கட்சிக்கோ எந்த பாதிப்பும் இல்லை. இதுபோன்ற அதிருப்திகள் இயல்பானது. பேசினால் தீர்வு கிடைக்கும். இரண்டொரு நாளில் அவரை சந்தித்து சமாதானம் செய்வேன். இதை பெரிய விஷயமாக எடுத்து கொள்ள வேண்டிய அவசியமில்லை’ என்றார்.

Tags : KARNATAKA ,MINISTER ,RAMALINGARETTI ,T. K. Shivakumar ,Bangalore ,Ramalinga Reddy ,Bangalore Development Department ,T. K. ,Sivakumar ,D. K. ,Congress government ,
× RELATED அசாம் அமைச்சரவை விரிவாக்கம்; 12 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு