×

இந்திய-நேபாள எல்லை விவகாரத்தில் சீனா, இங்கிலாந்து தலையீடா?.. பாலன் ஷா அழைப்பால் சர்ச்சை

 

காத்மாண்டு: நேபாள பிரதமர் பாலன் ஷாவின் சர்ச்சைக்குரிய பேச்சால் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் இன்று முற்றிலுமாக முடங்கின. கடந்த 1816ம் ஆண்டு சுகவுலி ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்தியா – நேபாளம் இடையே எல்லைகள் வரையறுக்கப்பட்டன. இதில் காலாபாணி, லிபுலேக் உள்ளிட்ட பகுதிகள் தொடர்பாக நீண்டகாலமாக பிரச்னை நீடித்து வருகிறது. இந்நிலையில், நேபாள பிரதமர் பாலன் ஷா, ‘இந்தியா மட்டும் நேபாள நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை, நேபாளமும் பல இடங்களில் இந்திய நிலத்தை ஆக்கிரமித்துள்ளது’ என்று கூறி புது குண்டைத் தூக்கிப் போட்டார்.

இது அந்நாட்டின் இறையாண்மையை அடகு வைக்கும் செயல் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கின. சுமார் 98 சதவீத எல்லைப் பகுதிகள் ஏற்கனவே தீர்க்கப்பட்டுவிட்டதாக இந்திய தரப்பு தெரிவித்துள்ள நிலையில், பிரதமரின் இந்த பேச்சு இரு நாடுகளுக்கும் இடையே பெரும் சிக்கலை உருவாக்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து நேற்று நேபாளி காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை முற்றிலுமாக முடக்கி அமளியில் ஈடுபட்டனர். பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவரது பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி கோஷமிட்டதால் அவையில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த பதற்றத்தை தணிக்க அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட விளக்கத்தில், ‘பிரதமரின் கருத்து அரசின் கொள்கை மாற்றம் அல்ல; எல்லைப் பகுதிகளில் நடக்கும் விவசாயம் மற்றும் எல்லைத் தூண்கள் மாயமானது போன்ற தொழில்நுட்ப கோளாறுகளையே அவர் அவ்வாறு குறிப்பிட்டார்’ என்று தெரிவித்தது. இதற்கிடையே சீனா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளை இப்பிரச்னையில் தலையிட பிரதமர் பாலன் ஷா அழைப்பு விடுத்த நிலையில், இந்தியா இதனைத் திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. எல்லையில் தற்போது தீவிர கண்காணிப்பு மற்றும் அடையாள அணிவகுப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

Tags : China ,UK ,India-Nepal ,Balan Shah ,Kathmandu ,India ,Nepal ,Calapani ,Libulek ,
× RELATED கர்நாடக முதலமைச்சராக பதவியேற்கிறார்...