சென்னை: தமிழகத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும் ்எனறு தமிழ்நாடு காவல்துறையின் புதிய டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் புதிய டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள மகேஷ் குமார் அகர்வால் இன்று காலை 11.26 மணிக்கு தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள டிஜிபி அறைக்கு வந்து, தமிழ்நாடு காவல்துறையின் 34வது டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் கையெழுத்து போட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதைதொடர்ந்து புதிய டிஜிபிக்கு தமிழக சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி அன்பு, சென்னை போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், உளவுத்துறை ஐஜி அஸ்ரா கர்க் உள்ளிட்ட காவல்துறை உயரதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர். அதனை தொடர்ந்து காவல்துறை இயக்குநர் அலுவலகத்தல் அமைக்கப்பட்டுள்ள நினைவு துணில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் புதிய டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழக டிஜிபியாக நியமித்து மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பளித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு, மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை காப்பதற்கும், போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்கும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதேபோல், சைபர் க்ரைம் குற்றங்கள் கட்டுபடுத்த அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க போகிறோம். தமிழ்நாடு காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஆதரவு தொடர்ந்து அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, நிருபர்கள் பல்வேறு கேள்விகளை புதிய டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலிடம் எழுப்பினர். ஆனால், டிஜிபி ” எந்த கேள்விகளும் வேண்டாம்” என்று சொல்லி விட்டு சென்றார்.
