நாகர்கோவில்: நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் வரையப்பட்டுள்ள ஓவியங்களை பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன. நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் தற்போது பல்வேறு விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே உள்ள 4 பிளாட்பாரங்கள் தவிர, தற்போது கூடுதலாக 2 பிளாட்பாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரயில் நிலையம் முழுவதும் பளபளக்கும் கற்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேற்கூரைகள் சீரமைக்கப்பட்டு டிஜிட்டல் மின்னணு பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. கழிவறைகள், பயணிகள் ஓய்வறைகள், தங்கும் விடுதிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் நிழற்குடை தனியாக கட்டப்பட்டுள்ளன. பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.
இவ்வாறாக நடந்து வரும் பணிகளின் ஒரு அங்கமாக தற்போது, ரயில் நிலைய சுவர்களில் வர்ணம் பூசப்பட்டு, குமரி மாவட்ட சுற்றுலா தலங்கள் மற்றும் தமிழர்களின் பாரம்பரிய விழாக்களை விளக்கும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. குமரியில் என்னென்ன சுற்றுலா தலங்கள் உள்ளன என்பதை பயணிகளுக்கு தெரிவிக்கும் வகையில் இந்த ஓவியங்கள் உள்ளன. இது மட்டுமின்றி தமிழர்களின் பாரம்பரிய பண்டிகைகளை விளக்கும் ஓவியங்களும் உள்ளன. வழக்கமாக தனியார்களிடம் விளம்பரங்கள் வாங்கி அவற்றை தான் சுவர்களில் வர்ணம் தீட்டுவார்கள். மாறாக தற்போது வரையப்பட்டுள்ள ஓவியங்கள் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்த ஓவியங்களுக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
