மும்பை: திரையுலகில் இருந்து அரசியலுக்கு வருவதற்கான வாய்ப்புகள் குறித்து பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் மனம் திறந்து பேசியுள்ளார். பாலிவுட் நடிகை பூமி பெட்னேகர் (35) ஏற்கனவே பாலா (2019) போன்ற படங்களில் வழக்கறிஞராக நடித்து சமூக மாற்றத்திற்காக குரல் கொடுத்துள்ளார். இவரது தந்தை சதீஷ் பெட்னேகர், மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் உள்துறை மற்றும் தொழிலாளர் அமைச்சராக பதவி வகித்தவர் ஆவார். திரையில் வரும் கதைகள் மூலம் சமூகத்திற்கு தனது பங்களிப்பை வழங்கும் பூமி, கடந்த ஜனவரியில் ஓடிடி தளத்தில் வெளியான ‘தால் தால்’ என்ற தொடரில் நடித்திருந்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா பெண் அதிகாரமளித்தல் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற பூமி பெட்னேகர் அரசியலில் நுழைவது குறித்து கூறுகையில், ‘எனது ரத்தத்திலேயே நாட்டுக்கு சேவை செய்வது கலந்திருக்கிறது. அது எந்த வடிவில் வந்தாலும் அதை நான் ஏற்றுக்கொள்வேன். தற்போது எனது கதைகள் மூலம் சமூகத்திற்கு சேவை செய்ய முயற்சி செய்து வருகிறேன்.
வருங்காலத்தில் இன்னும் ஆழமான முறையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தால், ஏன் அரசியலுக்கு வரக்கூடாது? நான் திரைக்கு வெளியேயும் செய்யும் பணிகள் அனைத்தும் நாட்டுப்பற்றின் வெளிப்பாடே ஆகும். எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே எனது கொள்கை’ என்று தெரிவித்தார்.
