×

திருப்பரங்குன்றம் கோயில் விவகாரம்; மனுதாரருக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை குறைப்பு: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

 

புதுடெல்லி: திருப்பரங்குன்றம் கோயில் மலை விவகாரத்தில் மனுதாரருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை உச்சநீதிமன்றம் குறைத்து உத்தரவிட்டுள்ளது. மதுரை திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக இந்துக்களுக்கும் அனுமதி வழங்கக் கோரி மதுரையைச் சேர்ந்த கேகே ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த உயர்நீதிமன்றம், விளம்பர நோக்கில் பொதுநல மனுத் தாக்கல் செய்ததாகக் கூறி மனுதாரருக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்ட மனுவானது, நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா மற்றும் அரவிந்த் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெய் சுகின் வாதிடுகையில், ‘திருப்பரங்குன்றம் மலை மீது அனைவரும் சென்று தீபம் ஏற்றலாம் என்று ஏற்கனவே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, ஆனால் தற்போது இஸ்லாமியர்கள் மட்டுமே மலை மீது சென்று தீபம் ஏற்றி வருகின்றனர்,

எனவே இந்துக்களையும் அனுமதிக்க வேண்டும் மற்றும் உயர்நீதிமன்றம் விதித்த அபராதத்திற்குத் தடை விதிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளில் தற்போது தலையிட விரும்பவில்லை என்று தெரிவித்தனர். இருப்பினும் மனுதாரருக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையான 50,000 ரூபாயை 5,000 ரூபாயாகக் குறைத்து உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை முடித்து வைத்தனர்.

Tags : Thiruparanguntaram Temple ,Supreme Court ,New Delhi ,Thiruparangundaram ,Temple Mount ,RAMESH ,MADURA ,HINDUS ,KARTHIKAI ,MADURAI ,
× RELATED சித்தூரில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் அளவீடு கற்கள் அகற்றம்