சித்தூர் : சித்தூர் மாநகராட்சி எல்லைக்குள் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் உள்ள அளவீடு கற்கள் அகற்றப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாநகராட்சி திட்டத்துறை அதிகாரி நாகேந்திரா கூறியதாவது: மாநகராட்சி ஆணையர் நரசிம்ம பிரசாத் உத்தரவின் பேரில் அங்கீகாரம் பெறாத வீட்டுமனை பிரிவுகளை கண்டறிந்து அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, சித்தூர் இந்திராநகர் பகுதியில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை ஆய்வு செய்தோம். அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் கட்டப்பட்ட குடியிருப்புகளை அடையாளம் கண்டு கற்களை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறோம்.
மேலும் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளில் உள்ள குடியிருப்புகளை முறைப்படுத்த விண்ணப்பிக்குமாறு வீட்டு மனை அமைப்பவர்களுக்கு ஏற்கனவே தெரிவித்துள்ளோம். ஆனால் அவர்கள் அங்கீகாரம் பெறாமல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் மாநகராட்சி திட்டத்துறை சார்பில்மாநகரம் முழுவதும் ஆய்வு செய்து அங்கீகாரம் பெறாமல் இருக்கும் வீட்டுமனைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
