திருத்தணி, மே 28: திருத்தணி முருகன் கோயிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக 28 நாட்களில் ரூ.1.51 கோடி செலுத்தியதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோயிலுக்கு, தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில், உண்டியல்களில் நகை பணம் மற்றும் பொருட்கள் செலுத்துகின்றனர்.
பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை மாதந்தோறும் திருக்கோயில் நிர்வாகம் சார்பில் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, கடந்த 28 நாட்களில் பக்தர்கள் செலுத்திய ஒன்றிய காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது. கோயில் இணை பதிவாளர் ரமணி தலைமையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, வசந்த மண்டபத்தில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி 100க்கும் மேற்பட்ட கோயில் ஊழியர்கள் நகை, பணம் மற்றும் பொருட்களை பிரித்து எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.
காலை 7 முதல் இரவு 8 மணி வரை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நிறைவாக ரொக்கமாக ரூ.1 கோடியே 51 லட்சம் 55 ஆயிரத்து 223, 358 கிராம் தங்கம், 6,623 கிராம் வெள்ளி பக்தர்கள் காணிக்கையாக 28 நாட்களில் செலுத்தியதாக திருக்கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
