ஆவடி, மே 28: ஆவடி மாநகராட்சி கூட்டத்தில் காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர் தர்ணாவில் ஈடுபட்டு மேயரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆவடி மாநகராட்சியில் தவெக ஆட்சி அமைத்த பின்பு முதல் மாமன்ற கூட்டம் நேற்று நடந்தது. மொத்தமுள்ள 48 வார்டுகளில் இருந்து திமுக, அதிமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் உட்பட 40க்கும் மேற்பட்ட மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை தெரிவித்தனர். பின்னர் 12.20 மணியளவில் மாமன்ற கூட்டம் முடிக்கப்பட்டது. அப்போது, தேசிய காங்கிரஸ் உறுப்பினர் மேகலா தர்ணாவில் ஈடுபட்டார்.
மேலும், மேயர் உதயகுமாரை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது திமுக உறுபினர்கள் மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. திட்டமிட்டு வாய்ப்பு வழங்கப்படவில்லை என காங்கிரஸ் உறுப்பினர்களும் திட்டமிட்டு பிரச்சினை செய்வதாக திமுக உறுப்பினர்களும் மாறி மாறி புகார் தெரிவித்தனர். இதனால் ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
