அறந்தாங்கி, மார்ச் 4: மணமேல்குடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மணமேல்குடி அடுத்த விச்சூர் குணபதிமங்கலம் கிராமத்தை சேர்ந்த கருப்பையா மனைவி அஞ்சம்மாள் (60). இவர் கணவர் இறந்துவிட்டதால் தனது வீட்டில் தனியாக வாழ்ந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு அதே பகுதியில் வசிக்கும் தனது மகன் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை வீட்டுக்கு வந்தார். பின்னர் வீட்டு கதவை திறந்து உள்ளே சென்றபோது வீட்டின் மேற்கூரை ஓடுகள் பிரிக்கப்பட்டிருந்தத. மேலும் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து 7 பவுன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மணமேல்குடி போலீசில் அஞ்சம்மாள் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சாமுவேல் ஞானம் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். மேலும் போலீசார் வழக்குப்பதிந்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.