×

என் இனிய பொன் நிலாவே பாடல் பதிப்புரிமையை இளையராஜா கேட்க முடியாது: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

 

புதுடெல்லி: மூடுபனி திரைப்படம் பாலுமகேந்திரா இயக்கத்தில் 1980ம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார். இதில் ‘என் இனிய பொன்நிலாவே..’ என்ற புகழ்பெற்ற பாடல் இடம்பெற்றிருந்தது. இதனை கங்கை அமரன் எழுதியிருந்தார். இந்த நிலையில் என் இனிய பொன் நிலாவே பாடல் உட்பட மூடு பனி திரைப்படத்தின் ஒலிப்பதிவுகள் மற்றும் இசைப் படைப்புகளின் பதிப்புரிமையை வைத்திருக்கும் சரிகமா இந்தியா லிமிடெட் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்திருந்தது. அதில், வெளிவரவிருக்கும் ஒரு தமிழ் திரைப்படத்திற்காக முறையான அங்கீகாரம் இல்லாமல் என் இனிய பொன் நிலாவே பாடலை மீண்டும் உருவாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தது. இதையடுத்து வழக்கை பரிசீலனை செய்திருந்த நீதிமன்றம் இளையராஜாவுக்கு எதிரான உத்தரவை பிறப்பித்திருந்தது.

மேற்கண்ட உத்தரவுக்கு எதிராக இளையராஜா தொடர்ந்திருந்த மேல்முறையீட்டு வழக்கு, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் சி.ஹரி சங்கர் மற்றும் ஓம் பிரகாஷ் சுக்லா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘இந்தியப் பதிப்புரிமைச் சட்டம் பிரிவு 2(பி)யின் கீழ், இசைப் படைப்பு என்பது ஒரு பாடலின் இசை மற்றும் மெட்டுக்களை மட்டுமே குறிக்கும். அதில் வரும் வரிகளோ அல்லது இறுதி ஒலிப்பதிவோ இசையமைப்பாளரைக் கட்டுப்படுத்தாது. சட்டப்பிரிவு 2(எப்)ன் படி, ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் பாடல்களின் ஒட்டுமொத்த ஒலிப்பதிவு உரிமை அந்தப் படத்தின் தயாரிப்பாளரையே சேரும்.

தயாரிப்பாளர் கடந்த 1980ம் ஆண்டே முறைப்படி இந்த உரிமையை சரிகம நிறுவனத்திற்கு ஒப்பந்தம் மூலம் மாற்றிக் கொடுத்துள்ளதால், சரிகம நிறுவனமே இதன் தற்போதைய சட்டபூர்வ உரிமையாளர். இளையராஜா இப்பாடலுக்கு இசையமைப்பாளர் மட்டுமே. அவர் பாடலாசிரியர் இல்லை. எனவே, இப்பாடலின் வரிகளைப் பயன்படுத்துவதற்கு அவர் உரிமம் கோர முடியாது. கடந்த 2012ம் ஆண்டு காப்பிரைட் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை முன்வைத்து, பழைய பாடல்களுக்குக் கூடுதல் உரிமைகளைக் கோர முடியாது என்று உத்தரவிட்டனர்.

Tags : Delhi High Court ,New Delhi ,Balumakendra ,Ilayaraja ,Ganga Amaran ,
× RELATED புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக...