சென்னை: தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன் கோவிலில் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்த முத்துக்குமார் என்ற மாணவன், சுவீடனில் உள்ள உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றான கே.டி.எச்.-ல் எம்.எஸ். பட்டம் பெற்றிருக்கிறார். அவர் தான் வாங்கிய இந்த பட்டத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சமர்ப்பிப்பதாக சமூக வலைதளத்தில் வீடியோ மூலம் கூறியிருந்தார்.
அந்த பதிவில், “எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான கேடிஎச்-ல் எம்எஸ் பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், மாணவன் முத்துக்குமாருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், எனக்கு சமர்ப்பிக்கிறேன்னு சொல்றதைவிட, உங்க பெற்றோருக்குச் சமர்ப்பிக்கிறது தான் சரியா இருக்கும். உங்களை மாதிரி படிச்சு முன்னேற விரும்புற இளைஞர்களுக்கு நீங்க ஒரு வழிகாட்டியாக இருந்து வழிகாட்டுனீங்கனா அதுதான் எனக்கு மகிழ்ச்சி. நீங்க இன்னும் பெரிய உயரங்களை அடையவும் புகழைப் பெறவும் வாழ்த்துகள் தம்பி” என்று பதிவிட்டுள்ளார்.
