×

மாநிலக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்யும் நிலையில் அரசியல் ஒட்டுண்ணி காங்கிரஸ் திமுகவை ஏமாற்றியது: பெங்களூருவில் பிரதமர் மோடி காட்டம்

பெங்களூரு: பெங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை ஒட்டுண்ணி என பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக சாடினார்.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற ‘ஆர்ட் ஆஃப் லிவிங்’ அறக்கட்டளையின் 45வது ஆண்டு நிறைவு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்ச்சித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘காங்கிரஸ் கட்சி ஒரு ஒட்டுண்ணி அரசியல் சக்தி; அக்கட்சி தனது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள மற்ற மாநிலக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்ய வேண்டிய நிலையில் உள்ளது. தமிழ்நாட்டில் தனது பல ஆண்டுகள் கூட்டாளியான திமுக-வை ஏமாற்றியுள்ளது. அரசியல் சூழ்நிலைகள் மாறும்போதெல்லாம் தனது கூட்டணிக் கட்சிகளுக்கே எதிராகத் திரும்புவதை வழக்கமாகக் கொண்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்குத் துரோகம் செய்வது மட்டுமே தெரியும்; அவர்கள் பொய்யர்கள், அவர்களின் உத்தரவாதங்களும் போலியானவை. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களான கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் நிர்வாகத் தோல்விகளும், உட்கட்சிப் பூசல்களும் மலிந்துள்ளன.

குறிப்பாக கர்நாடகாவில் ஆட்சி நிர்வாகத்தை விட, தலைமைப் பிரச்னைகளைச் சமாளிப்பதற்கே அதிக நேரம் செலவிடப்படுகிறது. கர்நாடக முதல்வர் இன்னும் எத்தனை நாட்கள் பதவியில் இருப்பார் என்று தெரியவில்லை; இரண்டரை ஆண்டு பார்முலாவா அல்லது ஆண்டுக்கு ஒரு முதல்வர் என்ற பார்முலாவா என்பது குறித்தும் இன்னும் முடிவு எட்டப்படவில்லை. காங்கிரஸ் ஆளும் எந்த மாநில அரசும் இரண்டாவது முறை ஆட்சிக்கு வந்ததில்லை. ஆட்சி அமைத்த சில மாதங்களிலேயே மக்களுக்கு அந்தக் கட்சியின் மீது அதிருப்தி ஏற்பட்டு விடுகிறது. தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளை ஜீரணிக்க முடியாமல், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் நீதிமன்றங்கள் மற்றும் அரசியல் சாசன அமைப்புகள் மீது பழி போடுகின்றன. அரசியல் சாசனம், ஜனநாயகம் மற்றும் நீதிமன்றங்கள் மீது இவ்வளவு வெறுப்பைக் காட்டும் எந்தவொரு பிரதான அரசியல் கட்சியையும் எனது பொது வாழ்வில் நான் பார்த்ததில்லை.

ஒரு காலத்தில் மக்களவையில் 400க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, தற்போது கூட்டணி அமைத்தாலும் 100 இடங்களைக் கூட தாண்ட முடியாமல் திணறி வருகிறது. இதற்கு நேர்மாறாக, 10 ஆண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் வெறும் 3 எம்.எல்.ஏ.,க்களை மட்டுமே கொண்டிருந்த பாஜக, தற்போது 200க்கும் மேற்பட்ட இடங்களுடன் வலுவான ஆட்சியை அமைத்துள்ளது. அதேபோல் கேரளாவிலும் 1 எம்.எல்.ஏ., என்ற நிலையிலிருந்து 3 ஆக உயர்ந்துள்ளோம். விரைவில் அங்கு பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மெஜாரிட்டியைத் தாண்டும்’ என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றங்களுக்கு இடையே, இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். நாட்டின் வளங்களைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, வளர்ந்த மற்றும் சுயசார்பு இந்தியாவை உருவாக்க அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்று அவர் அழைப்பு விடுத்தார்.

விஜய்க்கு மோடி வாழ்த்து
பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : DIMUKA ,MODI KATHAM ,BANGALORE ,Narendra Modi ,Congress party ,Bengaluru ,Art of Living Foundation ,Bangalore, Karnataka ,Modi ,
× RELATED தமிழ்நாடு முதலமைச்சராகப்...