திருச்சி: திருச்சியில் முன்னாள் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அளித்த பேட்டி: பிளஸ்2 பொதுத்தேர்வில் கடந்த ஆண்டை விட 0.1 சதவீதம் தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டுகள். ஒட்டுமொத்தமான தேர்ச்சி விகிதத்தில் திருச்சி மாவட்டம் 5வது இடம் பிடித்ததும், அரசு பள்ளிகளில் தேர்ச்சி விகிதத்தில் 3வது இடம் பிடித்ததும் பெருமையளிக்கிறது. பிளஸ்2 தேர்வு முடிவுகள் வாழ்க்கை கிடையாது. தேர்வில் வெற்றி பெறாத மாணவர்கள் வருத்தப்படாமல் துணைத்தேர்வுக்கு தயாராக வேண்டும்.
பிஎம்ஸ்ரீ திட்டத்தை ஏன் வேண்டாம் என்பதை ஏற்கனவே விளக்கி உள்ளோம். இருமொழி கொள்கையே தமிழ்நாட்டுக்கு போதுமானது. ஆட்சிக்கு வருவது யாராக இருந்தாலும் அதை ஏற்று கொள்ளக்கூடாது. அரசு எடுக்கும் இந்த முடிவுக்கு ஒட்டுமொத்த தமிழ்நாடும் துணை நிற்கும். தமிழ்நாட்டின் நலன் சார்ந்து அனைவரும் ஓரணியில் நிற்போம். இவ்வாறு அவர் கூறினார்.
