×

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் சித்திரை பிரமோற்சவ விழா மே 1ம் தேதி தொடக்கம்: 7ம் தேதி திருத்தேரோட்டம்

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், 108 வைணவ திருத்தலங்களில் தனிச்சிறப்பு வாய்ந்தது. மேற்கு திசை நோக்கி யோக நரசிம்மர் வீற்றிருக்கும் இத்தலத்தில், உற்சவராக எழுந்தருளும் தெள்ளிய சிங்கர், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோயிலில், சித்திரை பிரமோற்சவத்தையொட்டி, வரும் 30ம் தேதி மாலை முளையிடுதல் எனும் அங்குரார்ப்பணம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து, மே 1ம் தேதி கொடிமரத்தில் முறைப்படி கொடியேற்றப்பட்டு, 10 நாள் உற்சவம் தொடங்குகிறது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான கருட சேவை, மே 3ம் தேதி அதிகாலை நடைபெறுகிறது. அன்றைய தினம் விடியற்காலை 5 மணி அளவில் கோபுர வாயிலில் பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளும் காட்சியைக் காணப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வார்கள்.

முன்னதாக மே 2ம் தேதி சேஷ வாகனமும், சிம்ம வாகன புறப்பாடும் நடைபெற்று, மே 3ம் தேதி இரவு அம்ச வாகனத்துடன் அந்த நாள் நிறைவுபெறும். மே 7ம் தேதி அதிகாலை 3.30 மணிக்கே உற்சவர் தேரில் நிலை கொள்ள, காலை 7 மணி அளவில் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தேரோட்டம் தொடங்கும். அன்றைய தினம் இரவு தோட்ட திருமஞ்சனம் எனும் விசேஷ வழிபாடு நடத்தப்படும்.9ம் தேதி காலை 11 மணிக்கு தீர்த்தவாரி வைபவம் நடைபெறுகிறது. அன்று இரவு கொடியிறக்கத்துடன் பிரதான சடங்குகள் முடிவுக்கு வரும். இறுதியாக மே 10ம் தேதி இரவு நடைபெறும் சிறிய திருத்தேர் ஊர்வலத்துடன் இந்த ஆண்டுக்கான சித்திரை பிரமோற்சவம் நிறைவு பெறுகிறது.

Tags : Chitrai Pramorasava Festival ,Thiruvallikeni Parthasarathi Temple ,Thirutherotam ,Chennai ,Yoga Narasimmar ,Thelya Singer ,Sridevi ,Bhudevi ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து