மதுரை, பிப். 24: மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.80 கோடி மதிப்பில் பெத்தானியபுரம் பாலம் முதல் விரகனூர் ரிங்ரோடு வரையிலும் வைகையாற்றின் இரு கரைகளையும் அகலப்படுத்தி, நான்கு வழிச்சாலையாக மாற்றும் திட்டம் தயாரானது. இதற்கான ரோடு அமைக்கும் பணிகள் நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி சார்பில் நடைபெற்று வருகிறது. நெடுஞ்சாலைத்துறை சார்பில் தற்போது முதல்கட்டமாக மதுரை தெப்பக்குளத்திலிருந்து விரகனூர் ரிங்ரோடு வரையிலான பணிகள் முடிவடைந்தன. தேர்தல் தேதி அறிவிப்பு வரலாம் என்பதால், அவசர அவசரமாக நேற்று மாலை தெப்பக்குளம் முதல் விரகனூர் ரிங்ரோடு வரையிலான ரோட்டை காணொளி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் கலெக்டர் அன்பழகன் பங்கேற்று, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இந்த ரோட்டை திறந்து வைத்தார். இதில் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.