×

திரளானோர் பங்கேற்பு புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை முறை காய்கறி சாகுபடிக்கு மானியம்

புதுக்கோட்டை, பிப்.23: புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை முறை காய்கறி சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது: இயற்கை முறையில் ரசாயனங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் இன்றி மேற்கொள்ளப்படும் வேளாண்மைக்கும், அதன் மூலம் விளைவிக்கப்படும் விளை பொருட்களுக்கும் தமிழ்நாடு அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்றுத்துறையால் குறைந்த கட்டணத்தில் தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் என விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கும்பொழுது அவற்றிற்கான தரச்சான்று இருக்கும் பட்சத்தில் அவற்றின் இயற்கை தன்மை உறுதி செய்யப்படுகிறது. எனவே அதற்கான தரச்சான்று என்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது.

தமிழக அரசின் விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று துறையால் அளிக்கப்படும் தரச்சான்றிதழ் மத்திய அரசின் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூலம் அங்கக உற்பத்திக்கான தேசிய திட்டத்தின்படி அளிக்கப்படுவதால் இந்த தரச்சான்றிதழ் மூலம் அங்கக விளைபொருள்களை வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம் அங்ககச்சான்று அளிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் விண்ணப்ப படிவம் 3 நகல்கள், பண்ணையின் பொது விபரக்குறிப்பு, பண்ணையின் வரைபடம், மண் மற்றும் நீர் பரிசோதனை விபரம், ஆண்டு பயிர் திட்டம், துறையுடனான ஒப்பந்தம் 3 நகல்கள், நில ஆவணம், பட்டா சிட்டா, நிரந்தர கணக்கு எண் அட்டை நகல், ஆதார் நகல், 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் ஆகியவற்றுடன் உரிய கட்டணம் செலுத்தி புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை உதவி இயக்குநருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

இதற்கான பதிவுக்கட்டணம் சிறு, குறு விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.2,700 எனவும், பிற விவசாயிகளுக்கு வருடத்திற்கு ரூ.3,200 எனவும், குழு பதிவிற்கு ரூ.7,200 எனவும், பெரு வணிக நிறுவனங்களுக்கு ரூ.9,200 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் விதமாக இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கீரை வகைகளுக்கு எக்டருக்கு ரூ.2,500 ம், வெண்டை, கத்தரி, தக்காளி போன்ற பயிர்களுக்கு எக்டருக்கு ரூ.3,750 ம் வழங்கப்பட்டு வருகிறது. இயற்கை முறையில் காய்கறி பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சான்று பெறுவதற்கு ரூ.500 மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Pudukottai District ,
× RELATED மக்காச்சோளம் சாகுபடியில் படைப்புழுவை கட்டுப்படுத்த கோடை உழவு அவசியம்