×

எடப்பாடி முதுகில் சவாரி செய்து தமிழகத்தில் காலூன்ற நினைக்கும் பாஜ: உ.வாசுகி காட்டம்

 

தஞ்சை: தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி பேசியதாவது: அதிமுகவிடம் ஆட்சி சென்றுவிட்டால் பாசிச கும்பலான பாஜ ஆட்சி தான் நடைபெறும். தமிழக முதல்வர் அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல்வேறு மாவட்டங்களில் இதற்காக தனியாக குழு அமைக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் பொதுமக்களிடம் கருத்து கேட்டு ஒரு சிறந்த தேர்தல் அறிக்கையாக முதல்வர் வெளியிட்டு இருக்கிறார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பத்தாயிரம் ரூபாய் மகளிருக்கு கருணைத்தொகையாக வழங்கப்படும் என முதலில் அறிவித்தார். பின்னர் விமர்சனத்திற்கு உள்ளானதும் அதை மகளிருக்கு உரிமை தொகை என மாற்றி பேசினார். நிருபர்கள் அந்த பத்தாயிரம் ரூபாய் எவ்வாறு கொடுப்பீர்கள் என்று கேட்டதற்கு அதிகாரிகளின் ஆலோசனைப்படி வரிகள் உயர்த்தப்பட்டு கொடுக்கப்படும் என மீண்டும் பொது மக்களின் தலையிலேயே வரி செலுத்த திட்டம் தீட்டி உள்ளது தான் எடப்பாடி தேர்தல் அறிக்கை. எடப்பாடியை முதல்வராக்கி அவரின் முதுகில் சவாரி செய்து பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கிறது.

மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கும் வரை எந்த ஒரு பாசிச சக்தியும் தமிழ்நாட்டில் நுழைய விட மாட்டோம். முதல்வர் சொல்வது போல் தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும்தான் போட்டி. இப்பொழுது புதிதாக ஒருத்தர் தோன்றியிருக்கிறார் அவர் யார் என்று உங்களுக்கே தெரியும். இப்படிப்பட்ட ஒரு கூட்டம் மக்கள் மத்தியில போகவில்லை, மக்கள் பிரச்சனை தெரியாது. 100 நாள் வேலை ஒரு ஸ்பாட்டுக்கு விஜய் போய் இருப்பாரா, சிறு, குறு வியாபாரிகள் தெரியுமா? மாநில உரிமைகள் பறிக்கப்படுவது தெரியுமா? ஏழைகள் இன்னும் ஏழையாகவே இருக்கிறார்கள். திட்டமிட்டு தமிழக மக்களை திசை திருப்பி சினிமா நட்சத்திரம் என்கிற ஒற்றை அந்தஸ்தை வைத்து அரசியல் செய்கிறார்.

இவர்களைப் போன்றவர்களையும் நிராகரிக்க வேண்டும். கடந்த ஐந்து ஆண்டுகளாக பல்வேறு நலத்திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வந்து ஒவ்வொரு பகுதி மக்களும் ஏதாவது ஒன்று தங்களுடைய வாழ்க்கையிலே நல்லது நடந்திருக்கிறது என்று நினைக்க வைக்கின்ற அளவுக்கான திட்டங்கள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இவை அனைத்திற்கும் ஆமாம், வேண்டும் என்கிற பதில் இருந்தால் 23ம் தேதி நாம் அழுத்த வேண்டிய சின்னம் உதயசூரியன். இவ்வாறு அவர் பேசினார்.

விஜய்க்கு மக்கள் பிரச்சனை தெரியாது. 100 நாள் வேலை ஒரு ஸ்பாட்டுக்கு விஜய் போய் இருப்பாரா? சிறு, குறு வியாபாரிகள் தெரியுமா? மாநில உரிமைகள் பறிக்கப்படுவது தெரியுமா?

Tags : Baja ,Tamil Nadu ,U. ,Vasuki Katam ,Thanjay ,Tanji District Orattanadu Nonreligious Progressive Alliance ,Vaithilinga ,Marxist Communist Party ,Vasuki ,Supreme Court ,
× RELATED இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று...