டெல்லி: காசியாபாத்தில் சிறுமியை வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. காசியாபத்தில் கடந்த வாரம் சிறுமி ஒருவர் பாலியல் வன்முறை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். முன்னதாக உயிருக்கு ஆபத்தான நிலையில் சிறுமியை அவரது பெற்றோர்கள் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தனியார் மருத்துவமனையில் சிகிச்சை தராததால் அரசு மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் சிறுமி உயிரிழந்தார்.
இந்த விவகாரத்தில் போலீசார் உரிய விசாரணை நடத்த வில்லை என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; சிறுமி வன்கொடுமை வழக்கை போக்சோவில் சேர்க்காத காவல்துறைக்கும் சிகிச்சை அளிக்காத மருத்துவமனைக்கும் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. மேலும் காசியாபாத் காவல்துறை கண்காணிப்பாளர் நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிறுமி வன்கொடுமை வழக்கு தொடர்பாக உத்தரப் பிரதேச அரசு பதிலளிக்கவும் உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
