திருச்செங்கோடு, பிப்.19: திருச்செங்கோடு சின்ன ஓங்காளியம்மன் கோயில் விழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். திருச்செங்கோட்டில் பிரசித்தி பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோயில் மாசிக்குண்டம் விழா, கடந்த 12ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. இதனையொட்டி, நேற்று தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. மலையடி குட்டையில் இருந்து 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புனித நீர் எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர். மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற ஊர்வலம், கோயிலை அடைந்ததும் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். விழாவில் இன்று(19ம் தேதி) குத்து விளக்கு பூஜை மற்றும் அக்னி கரகம், அலகு குத்துதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி விழா வரும் 23ம் தேதி(செவ்வாய்க்கிழமை) இரவு நடக்கிறது.