திருத்தணி: திருத்தணியில் புதிய பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அங்கிருந்து அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. இதனால், பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். எற்கனவே, பயன்பாட்டில் இருந்த பழைய பேருந்து நிலையம் மூடப்பட்டது. திருத்தணியில் நகராட்சி அலுவலகம் அருகில் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம் கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மக்கள் தொகை அதிகரிப்பு, வாகன நெரிசல் அதிகரித்துள்ளதால், திருத்தணியில் போக்குவரத்து பாதிப்பு அதிகரித்து வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் அவதி அடைந்து வந்தனர்.
இதனால், அரக்கோணம் சாலையில் நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.21.97 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டது. புதிய பேருந்து நிலையத்தை கடந்த மாதம் 4ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இருப்பினும், மின் விளக்குகள் பொருத்துவது உள்ளிட்ட சிறு சிறு வேலைகள் இருந்ததால், புதிய பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் இயக்குவது தொடங்காமல் இருந்தது. இந்நிலையில், 30ம் தேதி முதல் புதிய பேருந்து நிலையம் இயங்கும் என்று மாவட்ட கலெக்டர் மு.பிரதாப் அறிவித்திருந்தார்.
பேருந்து நிலைய இறுதிகட்ட பணிகள் முடிவுற்ற நிலையில், புதிய பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால், பல ஆண்டுகளாக பரபரப்பாக இருந்த பழைய பேருந்து நிலையத்தில் தடுப்புகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. இதனால், அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது. இதனால், பயணிகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பயணம் செய்து வருகின்றனர்.
இந்த பேருந்து நிலையத்தில் பயணிகள் அமர இருக்கைகள், குடிநீர், கழிவறை, ஓய்வு அறைகள் உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் செல்ல பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்து அலுவலர்கள் தெரிவித்தனர்.
