சென்னை: மதிமுக வேட்பாளர் உதய சூரியன் சின்னத்தில் போட்டி என்ற வைகோவின் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கப்பட்ட 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்ததாவது; 2026, ஏப்ரல் திங்களில் நடைபெற இருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மறுமலர்ச்சி தி.மு.கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் ஒன்றான வழசீர்காழி (தனி) தொகுதியிலும் கழக வேட்பாளர் வழக்கறிஞர் ரா.செந்தில்செல்வன் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார் என்பதை தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார். தனி சின்னத்தை கேட்டு பெறுவதில் தாமதம் நிலவுவதால், தேர்தல் நெருங்கும் சூழலில் சின்னத்தை அறிமுகம் செய்து பிரசாரம் செய்வது கடினமாக இருக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி 176 தொகுதிகளில் ‘உதயசூரியன்’ சின்னம் களம் காண உள்ளது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, மதிமுக வேட்பாளர் உதய சூரியன் சின்னத்தில் போட்டி என்ற வைகோவின் அறிவிப்புக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்ததாவது; “ஆருயிர் அண்ணன் வைகோ பெருந்தன்மையோடு எடுத்துள்ள இந்த முடிவை நன்றியோடு வரவேற்கிறேன். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வெல்க” என்று பதிவிட்டுள்ளார்.
