*பொதுமக்கள் மகிழ்ச்சி
சிதம்பரம் : சிதம்பரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பல்வேறு பணிகள் பல கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக நீர் நிலைகளை பாதுகாத்திடும் வகையில் குளங்கள் தூர்வாரி சீரமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்டம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் பொருட்டு வெளிவட்ட சாலை, நகர் விரிவாக்க திட்டத்தின் கீழ் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகம் செல்லும் வழியில் காந்தி பூங்கா உள்ளது.
இந்த பூங்காவில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு இருந்தது. இதையடுத்து நகராட்சி நிர்வாகம் சார்பில் ரூ.11 லட்சம் மதிப்பில் இந்த பூங்காவை சீரமைத்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதனால் தாலுகா அலுவலகம், சப்-கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் பொதுமக்கள் இந்த பூங்காவில் இளைப்பாரி, ஓய்வு எடுத்து செல்கின்றனர். குறிப்பாக இப்பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு வசதியாக உள்ளதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
