*பெரம்பலூரில் அரசு சார்பில் அஞ்சலி
பெரம்பலூர் : பெரம்பலூரில் இறந்த ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கிக் கிளை மேலாளர் முழு உடலையும் தானம் செய்ததால் அவரது உடலுக்கு அரசு சார்பாக வருவாய் கோட்டாட்சியர் அனிதா மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பெரம்பலூர் நகராட்சி பாரதி தாசன் நகரை சேர்ந்தவரும், திருச்சி மாவட்ட தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின், பெரம்பலூர் கிளை மேலாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர் கோவிந்தசாமி. இவர் கடந்த 23ஆம்தேதி காலையில் இறந்து விட்டார்.
இறப்பதற்கு முன்பாக கோவிந்தசாமி தான் இறந்தபிறகு தன்னுடைய முழு உடலையும் தானம் செய்வதாக தெரிவித்திருந்தார். அதன் அடிப்படையில் நேற்று கோவிந்தசாமியின் உடலை, அவரது மனைவி சரஸ்வதி மற்றும் மகள்களும், பேரப்பிள்ளைகளும் ஆற்றும் கரங்கள் அறக்கட்டளை அமைப்பின்மூலம், அரியலூரில் உள்ள மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மாணவர்களின் ஆராய்ச்சிக்காக தானம் வழங்க சம்மதம் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இறந்த கோவிந்தசாமியின் உடலுக்கு தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியர் அனிதா, பெரம்பலூர் தாசில்தார் சத்தியமூர்த்தி ஆகியோர் கோவிந்தசாமியின் வீட்டிற்கு சென்று, அங்கு வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
