*அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு
திருமலை : சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர் உட்பட 3 செம்மரக்கட்டை கடத்தல்காரர்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார்.
செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படை தலைவர் சுப்பராயுடு சிறப்பு நடவடிக்கைத் திட்டத்தின்படி, காவல் கண்காணிப்பாளர் பி.சீனிவாஸ் தலைமையில், உதவி காவல் கண்காணிப்பாளர் ஜே.குலசேகர் மேற்பார்வையில், கடந்த காலங்களில் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்குகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது.
இதற்காக சிறப்பு அரசு வழக்கறிஞர் அமர் நாராயணா, கடத்தல்காரர்களுக்கு எதிரான தொழில் நுட்ப ரிதியாக ஆதாரங்களை நுணுக்கமாக முன்வைத்து தண்டனை கிடைக்கும் வகையில் வாதிட்டு வருகிறார். அவ்வாறு திருப்பதி மாவட்டம், பனப்பாக்கம் வனப்பகுதியில் உள்ள முங்கிலிப்பட்டு சரகத்தில், குற்ற எண் 17/2016 வழக்கில், தமிழ்நாடு சேலம் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.தங்கராஜு, பெங்களூருவை சேர்ந்த டி.ராஜேந்திரன் மற்றும் டி.நவாஸ் ஆகியோரை கைது செய்தனர்.
இந்த வழக்கில் செம்மரக்கடத்தல் சிறப்பு கூடுதல் இணை நீதிபதி நரசிம்ம மூர்த்தி முன் குற்றம் நிரூபிக்கப்பட்டதால், நீதிபதி கடத்தல்காரர்களுக்கு அபராதத்துடன் சிறைத் தண்டனையும் விதித்தார்.
இதில் தங்கராஜு மற்றும் ராஜேந்திரனுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.3.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. நவாஸுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.6.10 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து 3 பேரையும் நீதிமன்ற உத்தரவின்படி, நெல்லூர் மத்திய சிறைக்கு அழைத்து சென்று அடைக்கப்பட்டனர்.
