×

பிளாஷ் பேக்கை சொல்லும் செல்லூர்; தெர்மோகோலை வச்சே இன்னும் ஓட்டுறாங்கப்பா…

 

மதுரை கோரிப்பாளையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: தவெகவை கூட்டணிக்கு நாங்கள் யாரும் கூப்பிடவில்லை. தொடர்பு கொள்ளவில்லையென எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார். அதிமுக கூட்டணிக்கு யாரும் வரவில்லையே என கேட்கிறீர்கள். நாங்க எதிர்க்கட்சி. என்னதான் செய்ய முடியும்? என்னத்த கொடுக்க முடியும்? உழைப்பை வேணுன்னா கொடுப்போம். எங்க செல்வாக்கை பயன்படுத்தலாம். மற்றபடி எங்கள் கூட்டணியே வலுவாகத்தான் இருக்கிறது. தற்போது வறட்சி காலம். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த காலத்தில் வறட்சி ஏற்பட்டது. இழப்பீடு கொடுத்து, சென்னை குடிநீர் பிரச்னையை தீர்க்க வேலூரிலிருந்து ரயிலில் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வந்தார்.

வெயில் கொடுமையால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டபோது, நாங்கள் வைகை அணைக்கு தண்ணீர் ஆவியாகாமல் தடுக்க தெர்மோகோல் கொண்டு போனோம். அதிகாரிகள், அன்றிருந்த கலெக்டர், முதன்மை பொறியாளர் சொன்னதன் பேரில்தான் நாங்கள் போனோம். அதை வைத்து இப்போதும் ஓட்டுகிறார்கள். சசிகலா, ராமதாஸ் கூட்டணியுடன் சேர்த்து தற்போது ஐந்து முனை போட்டி உருவாகி விட்டதாக கூறுகிறீர்கள். எத்தனை போட்டி வந்தாலும் சரிங்க… அதிமுக கூட்டணியா? திமுக கூட்டணியா? இதுதாங்க போட்டி. அதிமுக மூன்றாம் இடத்திற்கு போகும் என்று டேட்டாவுடன் ஆதவ் அர்ஜூனா சொல்றதுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்லிக் கொண்டிருக்க முடியாது. இவ்வாறு கூறினார்.

 

Tags : Madurai Gorippalaya ,minister ,Celluor Raju ,Davekawa alliance ,Edappadi Palanisami ,Great Alliance ,
× RELATED தமிழக பாஜகவில் கோஷ்டி பூசல்...